
பெருவானம் மறைத்த
இறுதிப் பௌர்ணமியின்
ஒளிர்வுடன் வந்த உன்னையும்
மண்நுழைந்து வேர்களினிடையில்
புகுந்ததொரு சொட்டுப்போல
பூமியின் விரிந்த பிரதேசமெங்கும்
கொட்டித் தீர்த்த உன்னையும்
வீட்டின் புதர்களிலும் பூக்களிலும்
படர்ந்து தொட்டு வீசி வரும்
கணநேர காற்றோடு கண்ட உன்னையும்
எங்கிருக்கிறாய் என்று நான்
கேட்கலாமா?
யாதொன்றும் இல்லாத காலங்களில்
அமைதியறுந்து யுத்தத்திற்குத் தயாராகி
எழுந்து விரிகிறது ஒரு பறவை
நிலவின் ஒளிர்வும் மழையின் சொட்டும்
காற்றின் படர்வுமற்று
உணர்வு தொலைத்த கவிதைவரிகளைத்
தேடித்பிடித்துக் கொத்தி முழுங்கி
விரித்த சிறகோடு கண் அயர்ந்துவிடுகிறது.
அதுதான்
நீயென்ற
யாதொன்றும் இல்லாத காலங்களைச் சொன்னேன்









