
என் கனவு வானம் உயரத்தில் இருக்கிறது
அங்கிருந்தபடியே அனைத்தையும் குனிந்து பார்க்கிறேன்
பனிபடர் நிலத்தில் உயர்ந்த மரங்கள் மேலாகவும்
சகாராவின் அழகிய அல்லிப்பூக்கள் நெடுகிலும்
சிரித்துவிளையாடும் சோமாலியக் குழந்தைகளோடும்
இஸ்ரேல் பாலஸ்தீனத்தின் புல்வெளிமீதும்
இலங்கைத்தீவில் பௌத்த, இஸ்லாமிய மனிதர்களோடும்
ஈரான் ஈராக்கிய புதிய நகரங்களுடாகவும்
நான் பறந்து வருகிறேன்.
மேகத் துண்டுகள் மனதை துடைத்தெறிகிறது
தேவதைகள் என்னோடு பூமிக்கு பயணப்படுகிறார்கள்
உலக உருண்டையில், எதிலும் கோடுகள் இல்லை
அண்டவெளியெங்கும் தெய்வீகமாக நான்
கடவுள்கள் மனிதர்களாக பிறந்துகொண்டிருக்கின்றனர்
சிரிப்பொலியில் கூட அபசுரம் இல்லை
பறந்து பறந்து பிரபஞ்சமாகி நிற்கிறேன்
ஒரு கடவுளைப்போல கைகளை அகல விரித்து
கண்களை முடியவண்ணம் கீழிறங்குகிறேன்
என் கனவுவானம் எப்போதும் மிக அகண்டது
புனிதபூமியில் பாதம் படும்போது மட்டுமே முரணாகிறது.
கனவுத்துண்டங்கள் வெடித்துத் ரப்பர்துண்டுகளாய் உருகி பிசுபிசுக்க
பர்ப்பி பொம்யைப்போல நான்.
மீதமிருக்கும் முதிர்ந்த பொம்மைகளால்
எனது உலகம் விளையாடப்படுகிறது.
பிறகு…









